விக்கிரவாண்டி: விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. முன்கூட்டியே தகவல் கிடைத்ததால் சென்னை சென்ற ரயில் தப்பியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் புலி ஆதரவு அமைப்புகள் இந்த சதி வேலையை நடத்தியிருக்கின்றனர். மேற்குவங்கத்தில் மாவோ., நக்சல்கள் ரயிலை தகர்த்து நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய சம்பவம் போல் , தமிழகத்தில் நடந்திருக்க வேண்டிய பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.
நேற்று நள்ளிரவில் விழுப்புரம் அருகே நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: திருச்சியில் இருந்து சென்னை நோக்கி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவில் விழுப்புரம் விக்கிரவாண்டி சித்தனி அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. வேகமாக வந்த ரயிலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக தகவல் கிடைக்காவிட்டால் தேச விரோத கும்பலின் ரயில் கவிழ்ப்பு சம்பவம் அரங்கேறியிருக்கும். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கும் என அங்கு முகாமிட்டிருக்கும் நமது தினமலர் செய்தியாளர் தெரிவிக்கிறார்.
நாசவேலையில் ஈடுபட்டது யார்? : தண்டவாளம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 4 அடி அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் போலீசார் ஒரு துண்டு பிரசுரத்தை எடுத்துள்ளனர். அதில் மேதகு பிரபாகரனின் தம்பிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சமீபத்திய இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து இந்த நாச வேலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
பல ரயில்கள் பாதியிலே நிறுத்தம்: விழுப்புரம் அருகே நடந்த இந்த சம்பவத்தினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டன. பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட. தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில்கள் 8. 35 க்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து ரயில் போக்குவரத்து துவங்கியது.
நாசவேலையில் இருந்து தப்பியது எப்படி? : நூற்றுக்கணக்கானவர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டு பெரும் நாசவேலையில் இருந்து ரயில் விபத்து தப்பிய சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்து கிடைத்த தகவலின்படி விவரம் வருமாறு: இந்த பாதையில் நள்ளிரவு 2. மணி . 10 நிமிடத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது ரயில் டிரைவர் சேகரன், ரயில் சற்று பம்முவதுபோல, உணர்வதாக பேரணி ஸ்டேஷன் மாஸ்டர் ருத்ரபாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த ரயில் கடந்து செல்லும்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை.
இவர் இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக வரும் ராக்போட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துள்ளார். ( இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வெடி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது) இதனையடுத்து ரயில்வே ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கோபால்நாத் ராவுக்கு முண்டியம்பாக்கம் ஸ்டேஷனில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தொடர்ந்து ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை தண்டவாளம் தகர்ந்த இடத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து பயணிகள் தப்பினர்.
ரயில் பயணிகள் பஸ்சில் அனுப்பி வைக்கப்படனர்: ரயில் நிறுத்தப்பட்டதால் இதில் பயணித்த பயணிகள் அனைவரும் அரசு பஸ் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ரயில் தண்டவாளத்தின் இடது புறம் 3 மீட்டர் நீளத்திற்கு சேதமுற்றுள்ளது. இதனால் சிலிப்பர் கட்டைகள் முழுமையாக சிதைந்து 4 அடிப்பள்ளம் ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும பதட்டத்துடன் காணப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் சென்னையில் இருந்து 145 .300 ரயில்வே கி.மீட்டர் தூரம் இருக்கும்.
துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது என்ன ? : வெடி வைத்து தகர்க்கப்பட்ட இடத்தில் கையினால் எழுதப்பட்டுள்ள வெள்ளை காகிதம் கிடந்ததை போலீசார் கைப்பற்றியுள்ளனர், இந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது: இந்திய அரசே ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜபக்சேயின் இந்திய வருகையை கண்டிக்கிறோம். தமிழினம் அழிப்பதற்கு துணைபோன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழா இனியும் மவுனம் சாதித்தால் புரியாது நமது மவுன வலி . இவண். மேதகு பிரபாகரன் தம்பிகள் . இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்பு இல்லை : டி. ஜி.பி., லத்திகாசரண் : ரயில் தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் டி.ஜி.பி., லத்திகாசரண் கூறியிருப்பதாவது: இந்த விஷயத்தில் முதல்கட்ட விசாரணையில் , மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் அமைப்பினர் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்ற ஆதாரம் ஏதும் இல்லை. அங்கு பயங்கரவாதிகள் யாரும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை , தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வெடிகுண்டு பொறுத்த வரை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளது.சம்பவம் நடந்த இடத்தில் புலிகள் ஆதரவு ராஜபக்சேவின் வருகை எதிர்ப்பு கடித நகல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கியூ பிரிவு போலீசாருக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
premkumar.raja@gmail.com