இலங்கை போர்க்குற்றங்கள் விசாரிக்க ஐ.நா., குழு நியமனம் : இலங்கை எதிர்ப்பு


கொழும்பு : இலங்கையில் போர் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை ஐ.நா., நியமித்துள்ளது.இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து முடிந்தது. இதில் போர் குற்றங்கள் நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த குழுவின் விசாரணை பாரபட்சமானதாக அமையும் என்ற எண்ணத்தால் ஐ.நா., பொதுச் செயலர் பான் -கி-மூன், தனக்கு இது குறித்து தெரியப்படுத்துவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.இந்தோனேசிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்சுகி தருஸ்மான், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வக்கீல் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் ஐ.நா., விசாரணைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், நான்கு மாதத்திற்குள் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்த தகவலை, ஐ.நா., பொதுச் செயலரிடம் சமர்ப்பிப்பார்கள். ஐ.நா.,வின் இந்த சிறப்பு குழு விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு கொடுக்கும் என நம்புவதாக, ஐ.நா., தகவல் தொடர்பாளர் மார்ட்டின் நெசர்கி தெரிவித்துள்ளார்.

"ராஜபக்ஷே அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு, போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் ஐ.நா., நியமித்துள்ள குழுவால் இடையூறு ஏற்படும்' என, இலங்கை அரசு கருத்து தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments