இப்படித்தான் இயற்கையில் எல்லாமும்...

பிரிவிற்கான ஒப்பந்தத்தோடுநம்
அறிமுகம் நிகழ்ந்தது..

தேவை
உனக்கும் எனக்கும் இடையிலிருந்தது.
பணம் உனக்கு,புணர்தல் எனக்கு.

நீ மறுத்தலை
பரிசோதிக்க இயலாத இடத்திலிருந்தாய்.
எனினும்,
நீ மறுத்துவிட கூடாதென்ற பயத்திலிருந்தேன்..

லௌகீக வாழ்வின்
எல்லாவற்றையும் போல்
அதற்க்கும் தொடக்கமிருந்தது..

முடிவை பற்றி எண்ணமில்லாமல்
இப்படித்தான் இயற்கையில்
எல்லாமும் தொடங்கியதா?

தேடல்
ஆப்ரிக்கா தாண்டி,
பின் கடல்கள் தாண்டிய
நம் மூதாதையரை வழிநடத்தியது போல்,
இரு உடல்களின் மீது
நம்மை வழிநடத்தியது..

பிரெஞ்சு புரட்ச்சியின்
சகோதரத்துவம் தவிர்த்து
சுதந்திரத்தையும்,சமத்துவத்தையும்
நாம் முழுதாய் பரிசோதித்தோம்.

பரிசோதனைகள்,
சத்தங்களை இசையாக்கியது,
கூர்கற்களை கொலைகருவியாக்கியது.
அதுவேதான்,
உன் பின் கழுத்து
உன் உணர்ச்சிகளின் குவியம்
என காட்டி கொடுத்தது.

இவற்றுக்கு இடையில்
சிலுவை குறித்தும்,
புத்தர் குறித்தும்,
மங்கோலியா குறித்தும் பேச
நமக்கு எப்படி நேரம் வாய்த்தது?

சாவை அஞ்சும் எல்லோரும்
பிறந்தவர்கள் என்பது போல்
முடிந்திட கூடாதென்று எண்ணினாலும்
நான் தொடங்கியிருந்தேன்..

லௌகீக வாழ்வின்
எல்லாவற்றையும் போல்
அதற்க்கும் முடிவிருந்தது..

ஒரு பழங்குடியின் சடங்குகளை போல்
பாசாங்கு எதுவுமற்றுநம் பிரிவு நிகழ்ந்து முடிந்தது..

முன் நிகழ்ந்தவை கனவென உதிர
இப்படித்தான் இயற்கையில்
எல்லாமும் முடிந்து போனதா?

---ஜெயசீலன்

Post a Comment

0 Comments