இலங்கை ராணுவம் மீண்டும் துவக்கிய தாக்குதலால் தமிழக மீனவர்கள் அச்சம்


ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதலை துவக்கிவிட்டதால், தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு சென்று வருகின்றனர்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்திவிட்டு, பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் முடிந்து மீண்டும் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்று முதல் மீண்டும் கடற்படையினர் தாக்குதலை துவக்கியுள்ளனர்.

ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 500க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 6 மணியளவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளை வழிமறித்து, வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர்.மீனவர்களை தாக்கி, அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு, விரட்டியடித்துள்ளனர்.

ஜோசப், சேகர், சேசு உட்பட 20க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள், மீன் பிடிக்காமல் நள்ளிரவிலேயே ராமேஸ்வரம் திரும்பினர்.இதனிடையே, இரவு முழுவதும் நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்ததை தூரத்திலிருந்து இலங்கை கடற்படையினர் கண்காணித்ததாக, நேற்று கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். இலங்கை தேர்தலில் ராஜபக்ஷே மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை ராமேஸ்வரம் மீனவர்கள் இனி தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும், என படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments