புதுடில்லி : கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்து ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற சச்சினுக்கு இன்னொரு பெருமை தேடி வந்துள்ளது. இந்திய விமானப்படையில் "குரூப் கேப்டன்' என்ற பதவிதான் அது. இந்தியாவிலேயே, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவருக்கு இந்த கவுரவ பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
டில்லியில் நேற்று நடந்த விழாவில், விமானப்படை தலைமைத் தளபதி பி.வி.நாயக் இக்கவுரவப் பதவியை சச்சினுக்கு வழங்கிப் பெருமைப் படுத்தினார். அதிகாரி அளவிலான அந்தஸ்து கொண்டது இப்பதவி. இந்திய விமானப் படையில் ஒன்பது தரங்களைக் கொண்ட அதிகாரி மட்டத்திலான வரிசையில் "குரூப் கேப்டன்' பதவி ஐந்தாவது இடத்தை பெறுகிறது. தேசத்துக்காக சிறப்பாக பணி புரிபவர்களை கவுரவப் படுத்தும் வகையில், இந்திய பாதுகாப்புப் படை சார்பில் கவுரவப் பதவிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு முன் 1944ல் ஜவஹர் ராஜா யஷ்வந்த் ராவ் (பிளைட் லெப்டினன்ட்), 1974ல் தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா (ஏர் வைஸ் மார்ஷல்) உள்ளிட்ட 21 பேர்களுக்கு கவுரவ பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 1983ல் உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவுக்கு, இந்திய ராணுவப் படை சார்பில் கடந்த 2008ல் லெப்டினன்ட் கர்னல் (கேப்டனுக்கு அடுத்த அந்தஸ்துள்ள பதவி) வழங்கப்பட்டது.
சச்சினுக்கு பயிற்சி: இப்பதவியை சச்சினுக்கு வழங்க, விமானப்படை சார்பில் கடந்த ஜனவரியில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த சில மாதங்களாக பாதுகாப்பு தொடர்பான அடிப்படை பயிற்சிகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. இதையடுத்து,நேற்று டில்லியில் நடந்த வண்ணமிகு விழாவில் "குரூப் கேப்டன்' கவுரவ பதவியை, விமானப்படையின் தலைமைத் தளபதி பி.வி. நாயக், சச்சினுக்கு வழங்கி கவுரவித்தார். தவிர, விமானப்படையில் சேரும் ஆசையை இளைஞர்களிடம் தூண்டும் விதமாக, விமானப்படையின் தூதராகவும் இவரை நியமித்தார்.
எங்களுக்கு உதவுவார்: இதுகுறித்து பி.வி.நாயக் கூறுகையில்,"" இளைஞர் களால் கவரப்பட்டவர் சச்சின். இவருக்கு "குரூப் கேப்டன்' விருது வழங்குவதன் மூலம், இளைஞர்கள் ஏராளமானோர் விமானப்படையில் இணைவார்கள். எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றனர் எனத் தெரியாது. ஆனால் இந்நிகழ்ச்சியினால் பள்ளி மாணவர்கள் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன். இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, எங்களுடன் இணைந்து சச்சின் உதவுவார்,'' என்றார்.
பெருமையாக உள்ளது: கவுரவ பதவியேற்புக்குப் பின்னர், மேடையில் நெகிழ்ச்சியுடன் சச்சின் பேசியது: இந்திய விமானப்படையின் சார்பில் கவுரவ பதவி வழங்கி கவுரவிக்கப் பட்டது, பெருமகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய நீண்டநாள் கனவு இன்று நிறைவேறியுள்ளது. விமானப் படையின் உறுப்பினராக இணைந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். தவிர, இதன் தூதராகவும் சிறப்பாக செயல்படுவேன். இந்திய இளைஞர்கள் விமானப்படையில் சேர முன்வர வேண்டும். ஏனெனில் இதன் மூலம் நமது தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும். இவ்வாறு சச்சின் பேசினார்.
கடும் நடவடிக்கை: நிகழ்ச்சியின் முடிவில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சச்சின் பதில் அளித்தார். இந்திய அணி தோல்வி மற்றும்"ஸ்பாட் பிக்சிங்' குறித்து சச்சின் அளித்த பதில்கள்: பொதுவாக நமது அணியில் சிறப்பான இளம் வீரர்கள் உள்ளனர். இவர்களை உலகமே பார்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் யாரும் மோசமாக விளையாட வேண்டும் என நினைக்க மாட்டார்கள். ஆனால் இலங்கைத் தொடரில் தான் இவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. இதற்காக வருத்தப்படக்கூடாது. ஆனால் எதிரணியின் பேட்ஸ்மேன், பவுலர்களில் யாரால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதை இவர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கேற்ப சிறப்பாக விளையாட முயற்சித்தால் நல்லது. ஸ்பாட் பிக்சிங் குறித்து ஐ.சி.சி., முழுமையான முறையில் விசாரிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட வீரர்கள் தவறு செய்தது நிரூபிக்கப் பட்டால், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும். ஏனெனில் இவர்கள் குற்றம் செய்ததன் மூலம், கிரிக்கெட்டுக்கு அவமானம் இழைத்துள்ளனர். எனது 21 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், எந்த இந்திய வீரரையும் சூதாட்ட ஏஜன்ட்கள் அணுகியதாக கேள்விப்பட்டதில்லை. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.
0 Comments
premkumar.raja@gmail.com