பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மயம்: துணைவேந்தர் உத்தரவு

ஓமலூர், ஜூலை 3: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று துணைவேந்தர் மு.தங்கராசு உத்தரவிட்டுள்ளார்.

÷ 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. நான்கு மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என 70க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

÷ சேலம் மாவட்டத்தில் மேட்டூரிலும், தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரத்திலும் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் உறுப்பு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பெரியார் பல்கலைக்கழகத்தின் நான்காவது துணைவேந்தராக மு.தங்கராசு 2007-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி பதவியேற்றார். இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

÷ பெரியார் பல்கலைக்கழகத்தில் அலுவலக நடைமுறைகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் தமிழிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,பல்கலைக்கழக அலுவலக தகவல் பரிமாற்றங்கள், கோப்புகள் என அனைத்தும் தமிழிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

÷உலகத் தாய்மொழி தினமான பிப்ரவரி 21-ம் தேதி, தமிழ்மொழியின் சிறப்பை பொதுமக்களுக்கு உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட பேரணி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இதன்படி சேலம்,நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற 9-வது பட்டமளிப்பு விழா நடைமுறைகள் அனைத்தும் தமிழில் நடத்தப்பட்டன.

÷இதில் பட்டமளிப்பு விழா உறுதிமொழி முதல் மாணவர்கள் பெயர் பட்டியல் வாசிப்பு என அனைத்தும் தமிழில் நடைபெற்றது.

÷மிக முக்கியமாக, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் அனைவரும் திங்கள்கிழமை முதல் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று துணைவேந்தர் மு.தங்கராசு உத்தரவிட்டுள்ளார்.

÷இதுகுறித்து அவர் கூறியது:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பெருமைகளை செயல்படுத்தும் விதமாக திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள்,அலுவலர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வருகை பதிவேடுகளும் இனி தமிழில் பராமரிக்கப்படும். இதேப் போன்று பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகள் தங்களுடைய கடிதங்களை தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

கல்லூரிகள் தமிழில் அனுப்பும் கடிதங்களுக்கு மட்டுமே பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்து பதில் அனுப்பப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் நாள்தோறும் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் அதற்கான தெளிவுரையுடன் மாணவர்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

÷பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்தின் முகப்பில் "தமிழ் வாழ்க' என்று பெயர் பலகை வைக்கப்படவுள்ளது. தமிழின் பெருமையை பறைசாற்றவும், தமிழ் மொழி வளர்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

Post a Comment

0 Comments