தமிழ்த்தேசியம் சொல் வரலாறு

 

தமிழ்த்தேசியம் சொல் வரலாறு

தமிழ்த்தேசியம் என்ற சொற்கோவையில் உள்ள தமிழ் என்ற சொல், தமிழையும் தமிழ்பேசும் இனத்தையும் குறிக்கிறது. தேசியம் என்பது தேச இருப்பு அதற்குறிய அரசியல் உரிமை, பண்பியல் ஆகியவற்றைக் குறிக்கிறது.தேயம் எனும் சொல் நாட்டைக் குறிக்க பழந்தமிழர்கள் பயன்படுத்திய சொல்லாகும். கழக(சங்க) இலங்கியங்கள் பலவற்றுள் தேயம் எனும் சொல் மொழிவழியில் தம் நாட்டையும் பிறநாட்டையும் குறித்து நிற்கின்றன. மொழிபெயர் தேயம் என்கிறது அகநானூறு 295பாடல். 

தமிழ்த்தேசியம் என்கிற சொல் தமிழக அரசியல் உலகில் ம.பொ.சி அவர்களின் கட்சியான தமிழரசுக் கட்சிக்காலத்திலேயே தோன்றிவிட்ட ஒரு சொல்லாகும். இந்தியாவின் பல்வேறு இனங்களை தேசிய இனங்கள் என்று விளித்துப் பேசினார். அவர் சிலப்பதிகாரத்தை தமிழ்த்தேசியக் காப்பியம் எனக் கூறிப் பரப்பினார். அவ்வப்போது ம.பொ.சி உள்ளிட்டோரால் தமிழ்த்தேசியம் எனும் சொல் பொதுவாக ஆளப்பட்டது.

 திமுகவிலிருந்து பிரிந்து ஈ.வெ.கி சம்பத் தொடங்கிய தமிழ்த்தேசியக் கட்சி இச்சொல்லை தேர்தல் அரசியலில் அறிமுகம் செய்தது. ஆயினும் தமிழ்த்தேசியம் எனும் சொல்லுக்குப் பல காலமாக அரசியல் உலகில் நிலைத்தன்மை கிடைக்கவில்லை. 1980களில் தமிழகத்தில் தோன்றிய தமிழ்த்தேசிய இயக்கங்கள், தமிழ்த்தேசியத் தலைவர்கள், அறிஞர்கள் ஆகியோரால் இச்சொல் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டது. 1990களில் பொது அரசியல் வெளியில் வேர்கொள்ளத் தொடங்கியது. 

2009 காலகட்டத்தின் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழ்த்தேசியம் தமிழர்களின் அறியப்பட்ட பொது அரசியல் கருத்தியலாக வளர்ந்தது. இவ்வாறாக தற்காலத்தில் தமிழர்கள் தமிழ் என்னும் தங்களின் தேசிய மொழியாலும் நிலப்பரப்பாலும் தம்மை அணிதிரட்டிக்கொள்ள ஊக்குவிக்கும் ஒரு கருத்தியலைச் சுட்டுவதாகவும் தமிழ்த்தேசியம் எனும் சொல் முதிர்ச்சியடைந்துள்ளது.

தமிழ்த்தேசியம் எனும் கருத்தியல்[தொகு]

தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். ம.பொ.சியின் செங்கோல் ஏடு தமிழ்த்தேசியக் கருத்தியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியது தமிழர் இனப்பெருமை பேசுவதோ, தமிழ்மொழிப் பெருமை பேசுவதோ மட்டும் தமிழ்த்தேசியம் ஆகாது.

 தமிழ்த்தேசியத்தின் உட்பிரிவுகளாக தமிழகத் தமிழ்த்தேசியம், தமிழீழத் தேசியம் ஆகியன உள்ளன


இவற்றுள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதிலும் மெய்யியல் நோக்கில் தமிழ்த்தேசியம் எளிமையானதாக இருக்கிறது. 


தமிழ்த்தேசியம் என்பது தமிழர்கள் தங்களைத் தேசிய இனமாகத் திரட்டிக்கொள்வதை நோக்கிய கருத்தோட்டம் எனக்கூறலாம். 


மேலும் தமிழ்த்தேசியம் என்பது இனவிடுதலைக் கொள்கையாகவும் விளக்கப்படுத்தப்படுகிறது. தமிழ்த்தேசியம் சாதியொழிப்பிற்கும் பெண் விடுதலைக்குமான உயர்நுட்பக்கருவி எனலாம்.மொழிவாரித்தேசியர்கள் சாதிய முரணைப் பின்னுக்குத் தள்ளி மொழி மற்றும் தேசி இன அடிப்படையிலான முரண்களை முதன்மைப்படுத்த முனைந்தனர்.இவ்வாறு திரட்டிக்கொள்வதற்கு அவர்களுக்கு இரு பற்றுக்கோடுகள் நடைமுறையில் உள்ளன. நிலப்பரப்பு மற்றும் மொழி ஆகியவனவே அவையாகும். 

தமிழ்த்தேசியம் தனக்கு முன் அரசியல் களத்தில் முதன்மையாக நின்று நிலவிய திராவிடம்இந்தியத்தேசியம்தலித்தியம் ஆகிய கருத்தோட்டங்களிலிருந்து வேறுபட்ட உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.

தமிழ்த்தேசியத்தின் வரலாறு[தொகு]

தமிழ்த்தேசம் உருவாகுமுன்பே தமிழ்த் தேசியம் முகிழ்த்துவிட்டது. அது தேசம் இல்லாத தேசியமாகத்தான் இருந்தது. அது உணர்வாக, பண்பாடாக, அறநெறியாக இருந்தது. தேச உள்ளடக்கத்தைப் பெற்ற பின் ஒரு முழுமைப்பட்ட அரசியல் கருத்தியலாக மலர்ந்தது. தேச உருவாக்கத்துக்கு தேசியம் உதவிற்று. தேசியத்தின் வளர்ச்சிக்குத் தேச உருவாக்கம் பொருத்தமான அடித்தளத்தை வழங்கிற்று. தமிழ்த்தேசியத்தின் வரலாறு இந்தியத்தேசியத்தின் வரலாற்றுக்கும் முன் தொடங்குகிறது.

தமிழர்கள் தொடக்கக் காலங்களில் மொழியை வைத்தே ஒரு தேசத்தை, நாட்டை அடையாளம் கண்டுவந்தனர். இதனைத் தமிழர்களின் பழம் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பிழிஆர் மகிழ்நர். கலிசிறந்து ஆர்க்கும்

மொழிபெயர் தேயம் இறந்தனர் ஆயினும்

(அகநானூறு 295)

விலங்கிருஞ் சிமையக் குன்றத்து உம்பர்

வேறுபல மொழிய தேயம் ஆயினும்

(அகநானூறு 215) என்பதாக மொழியைச் சுட்டியே தேசம் அடையாளம் காணப்பட்ட செய்திகளை தமிழரின் பழைய இலக்கியங்களில் பார்க்க முடிகிறது.

தமிழகத்தை ஒரு நாடாகவும் தமிழ்நிலமாகவும் கண்ட தொன்மையான குறிப்புகள் தமிழின் பழம்பெரும் இலக்கியங்களில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. தமிழ்மொழியைத் தம் அடையாளமாகக் கூறுவதும், தமிழ்நாட்டின் நில ஓர்மையை விளக்குவதும் தமிழ்த்தேசியத்தின் படிவுகளாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியங்கள் வழி பண்டைத் தமிழ்ச்சமூகம் பற்றி நாம் அறியத்தக்க செய்திகள் குறிப்பாக இரண்டு.

ஒன்று, பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் பிறப்பு அடிப்படையில் ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ நோக்கும், இயற்கையோடு இயைந்த சமயச் சார்பற்ற பண்பாட்டு நெறியும் கொண்டதாக விளங்கி வந்திருக்கிறது.

மற்றொன்று, அவர்கள் தங்கள் தாயகம் பற்றிய தெளிவான புரிதலுடன் “ வடவேங்கடம் தென்குமரி ஆயிடை” என அதன் எல்லை அறிந்து அதைத் “ தமிழ் கூறும் நல்லுலகு என்றோ, தமிழகம், தமிழ்நாடு, தென்னாடு என்றோ பலவாறு பெயரிட்டு அழைத்துத் தாய்மண் மீது பற்று , பெருமிதம் கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்துள்ளனர்.

தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிரத்தில் வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு எனும் வரிகள் தமிழர்கள் வாழும் நில எல்லைகளைக் குறித்தன.

வையக வரைப்பில் தமிழகம் கேட்ப (புறநானூறு, 168 :18)
இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க (பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5)
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய (சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38)
சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் (மணிமேகலை, 17: 62)

இதுபோன்ற நில எல்லை வரையறுப்புகளும் தமிழர்கள் வாழும் நிலத்தை பதிற்றுப்பத்து, புறநானூறு, சிலப்பதிகாரம் முதற்கொண்டு பாரதியார்வரை தொடர்ச்சியாக தமிழ்நாடு, தமிழகம் என அழைத்து வந்ததும் தமிழ்த்தேசியத்தின் நிலவியல் வரலாற்றுக்கான இலக்கிய சாட்சியமாக உள்ளன. தமிழ்நாடு சேர சோழ பாண்டியர் உள்ளிட்ட மூவேந்தர்களால் ஆளப்பட்ட காலத்திலும் அறிவர் உலகில் தமிழ்நாடு எனச் சுட்டப்பட்டது. இது தமிழ்த்தேசியத்தின் தோற்றக்காலப் படிவாகும். 


தமிழ்நாடு எனும் சொல் பலகாலமாக தமிழ் அறிவுத்துறையில் ஆளப்பட்டமை தமிழர்கள் தங்கள் நிலப்பரப்பை தங்களின் நாடாக, தேசமாக உணர்ந்திருந்த அறிந்துணர்வின் வெளிப்பாடாகும். இது தமிழ்த்தேசியத்தினைப் பிற்காலத்தில் உருவாகிடச் செய்த காரணிகளில் ஒன்றாக உள்ளது.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலிங்க நாட்டு அரசன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டுச் செய்திகளிலிருந்தும், அக்காலத்தமிழ் இலக்கியப் பதிவுகளிலிருந்தும் மூவேந்தர்களின் ஒருங்கிணைவுச் செய்திகளை அறியலாம்.

ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் இருவரும்

உடனிலை திரியீராயின் திரைப்

பௌவம் உடுதவிப் பயங்கெழு மாநிலம்

கையகப் படுவுத பொய்யா காதே

அதனால்,

நல்ல போலவும், நயவ போலவும்,

தொல்லோர் சென்ற நெறிய போலவும்

காதல் நெஞ்சின்நும் இடைபுகழ் கலமரும்

ஏதின் மக்கள் பொதுமொழி கொள்ளாது

இன்றே போல்க நும் உணர்ச்சி

-என்ற (புலவர் காரிக்கண்ணனாரின் புறநானூற்றுப் பாடல் எண் 58)புறநானூற்றுப் பாடல்வழி, அன்றைய மூவேந்தர்களும் ஒன்றிணைவு குறித்த குறிப்பினை அறியலாம். வரலாற்றில் தமிழ்த்தேசியம் கடந்துவந்த நீண்ட வரலாற்றுப்பாதையில் தன்னாளுமையுடன் (சுய அதிகாரத்ததுடன்) இருந்த காலம் மிகவும் குறைவு. களப்பிரர், பல்லவர், நாயக்கர், முஸ்லீம்கள், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகிய வேற்று மொழி மக்கள் ஆண்ட காலங்களில் தமிழர்கள் தம் அடையாளத்தைக் கலாச்சாரத்தைப்பேணிக் காத்துக்கொள்ள முயன்றனர். வேற்றுச்சமயங்கள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் அந்த சமயங்களை எதிரப்பதற்காகத் தமிழ் மொழியை, எதிர்ப்புணர்வுக்குரிய கருவியாகவும் பயன்படுத்தும் போக்கு இருந்ததையும் காண நேரிடுகின்றது.

நவீனத் தமிழ்த்தேசியம் ஓர் அரசியல் கருத்துருவாக உருவாகி ஏறத்தாழ நூறு ஆண்டுகள் ஆகின்றன. தமிழரின் அடையாளங்கள் எவை? தமிழ்மொழியே தமிழரின் முதன்மையான அடையாளம் என்ற ஒரு பதிலை 19ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்தே உருவாக்கி வந்தனர். வேதங்களே இந்தியரின் அடையாளம். வேதாந்தமே இந்தியரின் ஆகப்பெரும் த த்துவம் , இந்து மதமே இந்தியரின் பேரடையாளம் என்ற அலை வேகமாக வீசி அடித்த காலத்தில் சமயம் சாராத, சாதி சாராத, மொழியை அடையாளமாக்கியவர்கள் தமிழர்கள் என்பது ஒரு சாதனையாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயோத்திதாசப் பண்டிதர் தமிழ்த்தேசிய அடையாளங்களின் தொடக்கப்படிவுகளைக் கண்டடைந்தார். சாதியைக் கடக்காமல் தமிழர்கள் இன ஓர்மைகொள்ள முடியாது என்பதில் உறுதியாக இருந்த அவர் ஒரு பைசாத் தமிழன், தமிழன் என இதழ்கள் தொடங்கி நடத்தினார். ‘தமிழன்’ என்ற தேசிய இனப்பெயரை அதன் அரசியல் சமூகப் பொருளோடு பயன்படுத்திய முதல் தமிழ்ச் சிந்தனையாளர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவர். அவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தாழ்த்தப்பட்டவர்களைத் தமிழன் என்று பதிவுசெய்திடக் கோரிக்கை விடுத்தார். இந்திய மண்ணில் சாதி அமைப்பின் மூலமாகத்தான் (பூர்வ) அறம் அழிந்து போனது என்பது அவரின் வாதம். அயோத்திதாசப்பண்டிதர் அன்று நசிந்துகொண்டிருந்த வேளாண் உழைப்பாளிகளை மையப்படுத்தினார். இது தமிழ் அடையாள உருவாக்கத்தில் அவரது தனிப்பெரும் பங்களிப்பாகும். அயோத்திதாசருக்கு முன்போ பின்போ இவ்வளவு தெளிவாகத் தமிழ் அடையாளத்தை விவசாயிகளோடு தொடர்பு படுத்தியவர்கள் எவரும் இலர். பண்டிதரில் நிலம், உழைப்பு, அறம், பூர்வத்தொன்மை, தமிழ்மொழி, பௌத்தம் ஆகியவை இணைந்து நிற்கின்றன.இவர் போன்ற அறிஞர்களின் செயற்பாடுகள் தமிழர்கள் தங்களின் தேசிய அடையாளத்தைக் கண்டடையும் பயணத்தின் விளைபொருட்களாகும். அதன்பின் வரதராசல நாயுடு தொடங்கிய தமிழ்நாடு இதழ், மொழிவாரியாகக் காங்கிரசு தன்னை அமைத்துக்கொண்டபோது உருவான தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி எனும் பெயர்தோன்றிய நிகழ்வு இவையனைத்தும் உருவாகிவந்த தமிழ்த் தேசியக் கருத்தியலின் முளைகளாகும். அதாவது தமிழ்நாட்டைத் தமிழ்நாடு என அடையாளப்படுத்துதல், தனிநபர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துதல், தமிழ் மொழியை தங்களின் இணைப்புக்குரிய கருவியாகப் பார்த்தல் ஆகியவை தமிழ்த்தேசியத்தின் தொடக்ககாலக் கூறுகளாக இருந்தன. இவற்றுள் சாதி மதங்களைக் கடந்து இன ஓர்மை பெறுவதன் தேவையும் உணரப்பட்டிருந்தது.

கிழக்கிந்திய நிறுவனம் இந்தியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்த முனைந்த தொடக்க அவதானிப்புகள் தமிழகத்தில் எழுந்தன. அவற்றினூடாக எழுந்த இந்தியத்தேசியத்தையும் திராவிடத்தேசியத்தையும் மறுத்து தமிழ்த்தேசியம் வளர்ந்தது. நீதிக்கட்சி பெயர்மாற்றக் காலகட்டத்தில் தமிழ்த்தேசியம் தீவிரமாக வெளிப்பட்டது. நீதிக்கட்சி தமிழர் கழகம் எனப் பெயர்மாற்றப்பவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பிய அண்ணல் தங்கோகி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தலைவர்கள் தமிழ்த்தேசியத்தை உட்கிடையாகத் தம் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தனர். இதுகுறித்த எழுந்த உரையாடலே தமிழகத்தில் திராவிடத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் இடையே நடந்த முதன்மையான உரையாடல்களுள் ஒன்றாக வரலாற்றில் இடம்பெற்றது.

 பல நூற்றாண்டுகாலமாக தமிழர்களுக்கான உரிமைகள், தமிழுக்கான முதலுரிமை ஆகியன பற்றிய விழிப்புணர்வு மிக்க தலைவர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களின் தொடர்ச்சியாக பிரிட்டிசு எதிர்ப்புக் காலத்தின் விளைவாகத் தமிழ்த்தேசியம் தேசிய அறிந்துணர்வோடு (பிரக்ஞையோடு) தன்னை 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தன்னை வெளிப்படுத்தியது. 

இராசாசி சென்னை மாகாணத் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்று இந்தித்திணிப்பில் ஈடுபட்டதும், அதற்கெதிராகத் தமிழறிஞர்களும் பெரியாரும் 1938இல் அறப்போர் தொடுத்ததும் இந்தியத்தேசியத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்குமான முதல் அரசியல் மோதலைக் குறித்தது. 

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிதொடங்கி முனைப்பாகத் தமிழத்தேசிய உரையாடல்களை, செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களுள் கி.ஆ.பெ விசுவநாதன்அண்ணல் தங்கோம.பொ.சி ஆகியோர் அடங்குவர். ம.பொ.சி 1946 மே 1 ஆம் நாள் தமிழ் முரசு எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அதே ஆண்டு நவம்பர் 21 ஆம் நாள் தமிழரசுக் கழகம் அமைப்பினை ம.பொ.சி தொடங்கினார். அந்த அமைப்பின் குறிக்கோளாக 1950களுக்குப்பிறகு பாவலரேறு பெருஞ்சித்திரனார்சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட பலர் அடங்குவர். இவர்களில் பெருஞ்சித்திரனார் இறுதிவரை தமிழ் தேசியத்தின் அத்தனை கூறுகளிலும் நின்று களம் அமைத்தார். ஆதலால் தமிழ்த்தேசியத் தந்தை என்ற அடைமொழியை பெற்றார். 1980 தொடங்கி தமிழ்த்தேசிய இயக்கங்கள் பல தமிழ்த்தேசியக் கருத்தியலை முழுமையாக ஏற்று இயங்கிவருகின்றன. 

திராவிடம், தலித்தியம், இந்தியத்தேசியம் ஆகிய அரசியல் கருத்துருவாக்கங்களுக்கு உள்ள வரலாற்றோடு ஒப்பிடுகையில் தமிழத்தேசியம் நீண்டதாகும்.

தமிழ்த்தேசியமும் சாதியொழிப்பும்

சாதிக் கட்டமைப்பு என்பது ஒருங்கிணைந்த ஒன்று. இதில் ஒரு பகுதியை மட்டும் மாற்ற முடியாது. அது ஒருமைப்பட்ட முழுமை (integral whole). அதனைப் பகுதிபகுதியாக அழிக்கவோ மாற்றவோ முடியாது. அடியோடு அழித்தால்தான் உண்டு. அறவே ஒழித்தால்தான் உண்டு. எல்லா உறுப்புகளையும் கழற்றிப் போட்டு மாற்றிப் பூட்டியாக வேண்டும். அதுதான் சாதி ஒழிப்பு. 

தமிழ்த்தேசியப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியாக சமத்துவ சமூக அமைப்புத் திட்டம் உள்ளது. தமிழகத்தின் சாதியொழிப்பு அரசியலில் தமிழ்த்தேசியம் தீர்மானகரமான பங்காற்றியுள்ளது. தமிழ்த்தேசிய ஆளுமைகளுள் முதன்மையானவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவர் தான் நடத்தி வந்த தென்மொழி இதழில் சாதி ஒழிப்புக்கான ஒரு திட்டத்தை வகுத்து வெளியிட்டார். 

திட்டவட்ட சாதியொழிப்பு அரசியல் மற்றும் தமிழ்நாடு விடுதலை எனும் தமிழ்த்தேசிய அரசியலோடு இணைத்து தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி நிறுவனர் தமிழரசன் அவர்களால் கோட்பாடாக முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கையே தமிழ்த்தேசியத்திற்கும் சாதியொழிப்புக்குமான உறவினைத் தெளிவுபடுத்தும் முதன்மையான வரலாற்று ஆவணமாக உள்ளது. இவ்வறிக்கை 1985இல் மீன்சுருட்டி எனும் ஊரில் நடந்த ஒரு கருத்தரங்கத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி மற்றும் தமிழ்நாடு விடுதலைப் படை ஆகியவை தொடர்ச்சியாக சாதியொழிப்பை உள்ளடக்கிய தமிழ்த்தேசிய அரசியலை நடைமுறையில் செய்துவந்தன. 

தமிழ்த்தேசிய இயக்கங்கள், கட்சிகள் எதுவும் சனாதன தர்மம் எனும் சாதிய அடிப்படையிலான சமூகப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ இல்லை. சாதியையும் மதத்தையும் கடந்து தமிழர்கள் இன ஓர்மை பெறவேண்டும் என்பதே அவ்வியக்கங்கள் முன்வைக்கும் கருதுகோள் ஆகும். சாதிதோன்றிய காலம் மிகத்தொன்மைக் காலமாகும். அதுமுதல் தமிழின் எழுதப்பட்ட வரலாற்றில் சாதியொழிப்புக் கருத்தோட்டங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இந்த சாதியொழிப்பு மரபினைப் பல தமிழ்த்தேசிய இயக்கங்கள் தம் மரபாகக் கருதுகின்றன. 

திருக்குறளின் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கூற்றும், சித்தர் மரபுகளும் , வள்ளலார் , பாரதியார், பாரதிதாசன் என சாதியொழிப்பு மற்றும் சாதியெதிர்ப்பு வழித்தடமே தமிழ்த்தேசியக் கருத்தியலின் சாதியொழிப்புப் பார்வையின் சாரமாக உள்ளது.

நிலப்பரப்பு

தமிழ்த்தேசியம் இருபெரும் தேசியப் பிரிவுகளைக்கொண்டுள்ளது. தமிழகத் தமிழ்த்தேசியம் மற்றும் தமிழீழத் தமிழ்த்தேசியம் ஆகியவையே அவை. தமிழகத்தைப்பொறுத்து 1956 உருவான மொழிவாரி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு நிலவும் தமிழ்நாடு எல்லைகளே பெரும்பாலான தமிழ்த்தேசிய இயக்கங்கள் (சிறுசிறு வேறுபாடுகளோடு) ஏற்றுக்கொண்ட நிலப்பரப்பாக உள்ளது. தமிழீழ எல்லை வரையறைகள் தமிழீழ விடுதலை இயக்கங்களால் வரையறைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும், தமிழ்த்தேசியம் பேசுவோரில் சி. பா. ஆதித்தனார் தமிழக மாநிலமும் தமிழக மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டதாக தமிழர்கள் கருதும் தமிழகத்தின் அண்டை மாநில நிலப்பகுதிகளையும் தமிழீழத்தையும் இணைத்து தனி தேசமாக தமிழ் தேசம் அமைய வேண்டும் என்று விரும்பினார்.இதுபோன்ற கருத்தியல்கள் பின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரை அகண்ட தமிழ்நாடு அமையப் போராடியவர்களாக சித்தரிக்க முயன்ற இந்திய அரசால் பரப்பப்பட்டன. எந்த ஒரு இயக்கமும் அமைப்பும் தமிழகத்தையும் ஈழத்தையும் இணைத்த ஒரு தேசத்தைப் படைக்கவேண்டும் என்ற இயங்குவதாக வெளிப்படையாக அறிவித்ததில்லை என்பதே இன்றைய நிலையாகும்.

தமிழ்த் தேசியம் நோக்கி கருத்து நிலைகள்

தமிழ்த் தேசியம் எதை நோக்கி அமைகின்றது என்று மேலே சுட்டப்பட்டாலும், அதைப் பல்வேறு வழிகளில் வெவ்வேறு நபர்கள் வரையறை செய்துள்ளார்கள். அவற்றின் தொகுப்பு கீழே:


கி. வெங்கட்ராமன்

தியாகு


https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

Post a Comment

0 Comments