பிரபாகரன் தப்ப தயார் நிலையில் இருந்த கப்பல் : இலங்கை கடற்படை தகவல்


கொழும்பு : விடுதலைப் புலிகள் ஆயுத கடத்தலுக்காக பயன்படுத்தி வந்த கப்பல், இறுதிக் கட்ட போர் நடந்தபோது, பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் செல்வராஜா பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு படையினரால் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், புலிகளுக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் இருப்பது தெரிந்தது. அதில் ஒரு கப்பலை இலங்கை கடற்படை சமீபத்தில் பறிமுதல் செய்தது. அந்த கப்பல், நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. "பிரின்சஸ் கிறிஸ்டினா' என்ற அந்த பிரம்மாண்ட கப்பல், புலிகளுக்காக ஆயுதம் கடத்த பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் தொடர்பான மேலும் பல புதிய தகவல்களை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மே மாதம், புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள், இலங்கையில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். கடல் வழியாக தப்பிப்பதே பாதுகாப்பானது என, முடிவு செய்த அவர்கள், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பிரின்சஸ் கிறிஸ்டினா கப்பலை இதற்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்காக இந்த கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பிரபாகரன் உள்ளிட் டோர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜரத்னம் வழக்கு: விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி செய்ததாகவும், அமெரிக்க பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' முறை மூலம் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக மோசடி செய்ததாகவும், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ராஜரத்னம் என்பவர், கடந்த அக்டோபரில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரின் நிதி மோசடி, அமெரிக்க பங்குச் சந்தையில் இதுவரை நடந்த மோசடிகளில் மிகப் பெரியது என, கூறப்பட்டுள்ளது. இவரது பங்குச் சந்தை மோசடி வழக்கு நியூயார்க் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், ராஜரத்னம் சார்பில் ஆஜரான அவரது வக்கீல் ஜான் டோவ்ட், கோர்ட்டில் கூறுகையில்,"ராஜரத்னம் ஒரு அப்பாவி. அவர் ஒரு போதும் பங்குச் சந்தை தொடர்பான மோசடியில் ஈடுபடவில்லை. கோர்ட்டில் அவரிடம் விசாரணை நடக்கும் போது, இதை அவர் தெளிவுபடுத்துவார்' என்றார். ராஜரத்னம் மீதான பங்குச் சந்தை மோசடி வழக்குகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என, கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments