சாகும் வரை வெள்ளை மாளிகையில் தங்க விரும்பினேன்


இஸ்தான்புல்: ""சாகும் வரை வெள்ளை மாளிகையில் தங்க விரும்பினேன். வெள்ளை மாளிகையை விட்டு என் சவப்பெட்டி தான் வெளியேற வேண்டும் என, நினைத்தேன். ஆனால், என் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதால் வெளியேறி விட்டேன்,'' என, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.




கடந்த 1992ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர் பில் கிளின்டன். அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்கலாம். அதனால், 2000ம் ஆண்டில் அவரின் பதவிக்காலம் முடிந்து விட்டது. கிளின்டனின் மனைவி ஹிலாரி தற்போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சராக உள்ளார்.




இந்நிலையில், துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில், நேற்று முன்தினம் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய அமெரிக்க பில் கிளின்டன் கூறியதாவது: எதற்கும் ஒரு வரையறை வைத்திருப்பது நல்லது; இல்லையென்றால் நான் சாகும் வரை வெள்ளை மாளிகையில் தங்கியிருப்பேன் அல்லது தேர்தலில் தோல்வியடையும் வரை தங்கியிருப்பேன். சுகாதாரம், வறுமை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க உதவி வரும், அறக்கட்டளை ஒன்றின் தலைவராக தற்போது இருக்கிறேன். அந்தப் பதவி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியலை என் மனைவி மற்றும் ஒபாமாவிடம் ஒப்படைத்து விட்டேன். முப்படைகளின் தலைவர் பதவியை நான் மிகவும் நேசித்தேன். அதனால், சாகும் வரை வெள்ளை மாளிகையில் தொடர விரும்பினேன். என் சவப்பெட்டி தான் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூட, நினைத்தேன். ஆனால், என் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டதால், அங்கிருந்து வெளியேற நேரிட்டது. இவ்வாறு கிளின்டன் கூறினார்.

Post a Comment

0 Comments